கொரோனா என்ற ஒன்றையே மக்கள் கிட்டத்தட்ட மறக்கத் தொடங்கிவிட்டனர். தொற்றுநோயின் பரவல் குறைந்து மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது கொரோனா. தற்போது ஒரு பெருநகரமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து கொண்டு இருக்கிறது.

தென்மேற்கு சீனாவின் செங்டு (Chengdu) நகரில் சுமார் 21. 2 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் பரவிய கோவிட் தொற்றால் 157 பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வியாழன் அன்று 6 மணியளவில் அங்கே லாக்டௌனை அறிவித்துள்ளது, அரசு.
தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக, மக்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அன்றாட வீட்டுத்தேவைக்கான பொருள்களை வாங்க, ஒருவர் மட்டும் ஒருநாளைக்கு வெளியே வர வேண்டும்.

கோவிட் தொற்றின் பரவல் அதிகரித்துள்ள பிற பகுதிகளிலும், வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாடு முழுதும் கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தலைதூக்கி இருப்பது, அங்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.