இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையில் குடிமக்கள் அனைவரும் ஒவ்வொருவரின் வீட்டிலும், அலுவலகத்திலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து தேசியக் கொடிகள் ரேஷன் கடைகளிலேயே விற்கப்படுகிறது. வடமாநிலங்களில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்கள் தேசியக் கொடியை வாங்க கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், “தேசியக் கொடிக்காக மக்களிடம் 20 ரூபாய் கேட்டுக் கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது” எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஒருவர் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க வந்திருக்கிறார். அவரிடம் ஊழியர் கொடியை வாங்கக் கட்டாயப்படுத்துகிறார். ஆனால் அவரோ என்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது. ரேஷன் பொருள்கள் வாங்க தான் பணம் இருக்கிறது எனக் கூறுகிறார்.
இந்த வீடியோக்கு பிறகு ராகுல் காந்தி, “ரேஷன் கடைகளில் ஏழை மக்களிடம் 20 ரூபாய்க்கு தேசியக்கொடி வாங்கக் கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது. நமது நாட்டுக் கொடியும் தேசப்பற்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது. எப்போதும் தேசப்பற்றை விற்க முடியாது. நம் நாட்டின் தேசியக் கொடி மட்டுமல்லாது, ஏழைகளின் சுயமரியாதையையும் பா.ஜ.க விற்கிறது” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்திருக்கிறது. அதில், “நாடு முழுவதும் மாதந்தோறும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தேசியக் கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசியக் கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்தக்கூடாது. இதனை உறுதிப்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.