இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது மேற்கிந்தியத் தீவுகளில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து டி20 தொடர் ஒன்றும் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், நேற்று இரவு இன்ஸ்டாவில் லைவ் ஒன்றை நடத்தினார்.
அந்த லைவில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ்வும் பங்கேற்றனர். பின் ரிஷப் பண்ட், தோனியை இந்த லைவில் பங்கேற்க வைக்க வீடியோ கால் செய்தார். அப்போது போனை எடுத்த தோனியின் மனைவி சாக்ஷி, ரிஷப் பண்ட்டிற்கு ஹாய் சொல்லிவிட்டு தோனியிடம் போனைக் கொடுக்க, ரிஷப் பண்ட் தோனியை பார்த்து’ நன்றாகப் பொழுதைக் கழிக்கிறீர்கள் போல…’ என்று இந்தியில் கூற சிரிப்பை அடக்க முடியாத தோனி, உடனே கேமராவில் கையை வைத்து மறைத்துக் கொண்டார். அவரை லைவ்வில் நீண்ட நேரம் இருக்க வைக்க நினைத்த பண்ட்டின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்திய கிரிக்கெட் வீரர்களான இவர்களுக்குள் நடந்த லைவ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுடன் ரசிகர்கள் சிலரும் லைவ்வில் இணைந்து பேசியுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் டி20 தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.