ராகுல் காந்தி பிறந்த நாள்: தெற்கு நோக்கிய அரசியலும் காலம் தந்த படிப்பினைகளும்

Share

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராகுல் காந்தி

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல் சக்தியாக ஜவாஹர்லால் நேரு-இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என வழி, வழியாக ஒரு அரசியல் குடும்பம் கோலோச்சி வருகிறது. அந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறை தலைவரான ராகுல் காந்திக்கு ஜூன் 19ஆம் தேதி பிறந்த நாள். ஆனால், 137 ஆண்டுகள் பழம் பெரும் இந்த கட்சியின் முழு நேர தலைமை பதவியில் அதிகபட்சமாக பதினெட்டரை மாதங்கள் மட்டுமே அவரால் வகிக்க முடிந்தது. இருந்தபோதும், அந்த கட்சியின் அசைக்க முடியாத தலைவராகவும் தேசிய அரசியலில் தற்போது தவிர்க்க முடியாதவராகவும் ராகுல் காந்தி பரிணமிக்க அவர் கொண்டிருக்கும் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை உதவி வருகிறது. அது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

52 வயதாகும் ராகுல் காந்தி வழிநடத்திய காங்கிரஸ் தலைமையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், 1984 மற்றும் 1991க்கு இடையிலான காலகட்டத்தில் அவரது தந்தை ராஜீவ் காந்தியின் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

இந்திரா காந்தியின் படுகொலையால் உருவான தேர்தல் அலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்தார் ராஜீவ் காந்தி. ஆட்சிக்கு வந்த சீக்கிரத்திலேயே, ‘அனுபவம் மிக்க நிர்வாகியாகவும் தலைவராகவும்’ தம்மை இந்திய அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டார்.

தமது தாயுடன் நெருக்கமாக வலம் வந்த தலைவர்களை படிப்படியாக ஓரங்கட்டி விட்டு தமக்கு நெருக்கமானவர்களை அரசு, கட்சிப் பதவிகளில் ராஜீவ் அமர்த்தினார். 1984இல் நடந்த மக்களவை தேர்தலில் உடனடியாக தேர்தல் நடந்த 514 இடங்களில் 404 இடங்களை ராஜீவ் காந்தியின் தலைமை வென்றது. 400க்கும் அதிகமான இடங்களுடன் அரசாங்கத்தைப் பாதுகாத்த ராஜீவின் தலைமைத்துவம், அப்போது காங்கிரஸ் கட்சியுடன் பின்னிப்பிணைந்திருந்த பழமைத்துவத்தை புனரமைப்பதில் பல முறை தள்ளாட்டத்தைக் கண்டது. அந்த காலகட்டத்தில் வி.பி. சிங், அருண் நேரு ஆகியோர் ராஜீவ் காந்தியின் அரசியல் அப்பாவித்தனத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. அந்த தலைவர்கள் 1989இல் காங்கிரஸை தோற்கடிக்க எதிர்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com