சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ரயிலில் பயணம் செய்த 30 வயதான ஆண் ஒருவர், ரயில் கதவின் அருகில் நின்று பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கதவு மூடியத்தில் அவர் ரயிலில் இருந்து தூக்கிவீசப்பட்டார். இந்த விபத்தில் வலது கை தோள்பட்டை துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். அதன் பின் தன் துண்டித்த கையுடன், கர்நாடக மாநிலம் ஒயிட்ஃபீல்டில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவரை சோதித்த பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஒன்பது மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது கையில் உணர்ச்சியை உணர ஆரம்பித்துள்ளார். அவரது தசைகள் மீண்டும் செயல்பட ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது பற்றி மருத்துவர்கள், “பாதிக்கப்பட்டவருக்கு தோள்பட்டைக்கு அருகில் உள்ள ஸ்டம்ப், மற்றும் துண்டிக்கப்பட்ட மூட்டுக்கு அருகில் உள்ள முனை கடுமையாக நசுங்கியிருந்தன. அதனால் மிக கவனமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். முதலில் வெளிப்புறத்தில் கையை பொருத்தினோம். இதனால் எலும்பு சட்டகம் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் மூட்டுக்கு சரியான ரத்த ஓட்டம் செல்வதை மீட்டோம். 48 மணி நேரத்துக்குப் பிறகு நரம்புகளைச் சரிசெய்தோம். சேதமடைந்த மற்றும் நக்ரோடிக் தசை திசுக்களை துல்லியமாக அகற்றினோம். இப்போது மூட்டு, வெளிப்புற தட்டுகள் மூலம் பேலன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு நோயாளியின் தசைகள் செயல்பட ஆறு மாதங்கள் ஆகும்” என்று விளக்கியுள்ளார்.