மத்தியப்பிரதேசத்தில் 2006-ம் ஆண்டு முதல் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் `முக்கிய மந்திரி கன்னிய விவாக்’ (Mukhyamantri Kanya Vivah) திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் கூட்டுத்திருமணத்தை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்கு முன்பு நடந்த கூட்டுத்திருமணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையும், விமர்சனம் எழுந்தது. ஆனால் மாநில அரசு பெண்களின் வயது, உடல் தகுதி, ரத்தசோகை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தது.
இந்த நிலையில், சமீபத்தில் ஜபுவா மாவட்டத்தில் உள்ள தண்டலா பகுதியில் 283 ஜோடிகளுக்கு மாநில அரசு திருமணம் செய்து வைத்தது. திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு மாநில அரசு சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் மேக்கப் பாக்ஸும் ஒன்று. அந்த மேக்கப் பாக்ஸை திறந்தபோது, உள்ளே காண்டம், கருத்தடை மாத்திரைகள் இருந்தன. இது மக்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.