மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் துர்சம்பவத்தில், அந்த நபர் குடிபோதையில் மோமோஸ் சாப்பிட்டு அது மூச்சுக்குழாயில் அடைத்து இறந்திருக்கிறார். இதை Cafe Coronary என்று சொல்வோம். தொண்டையில் உணவுக் குழாயும் சுவாசக்குழாயும் ஒட்டியபடியே இருக்கின்றன. சுவாசக்குழாய்க்குப் பின்புறத்தில் உணவுக்குழாய் இருக்கிறது. இவை இரண்டுக்கும் தனித்தனிப்பாதை கிடையாது என்பதால் உணவை மிகக் கவனமாக விழுங்க வேண்டும். ஆகவேதான், டிவி, செல்போன் பார்த்தபடியோ, புத்தகங்கள் படித்தபடியோ சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
உணவுக் குழாயில் காற்று செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, மூச்சுக்குழாயில் உணவோ, நீரோ போனால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இயற்கை இந்தக் கட்டமைப்பை வலுவாகத்தான் அமைத்திருக்கிறது. தண்ணீர் குடிக்கும்போதும், உணவை விழுங்கும்போதும் மூச்சுக்குழாய் தானாக மூடிக்கொள்ளும். அப்போது நம்மால் சுவாசிக்க முடியாது. நம் கவனம் சிதறும்போது இது மாறிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். சாப்பிடுவது என்பது அனிச்சை செயல் அல்ல. உணவு, தொண்டையைத் தாண்டி செல்லும்வரை கவனமாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு. அதன் பிறகான செரிமான நடவடிக்கைகள் தானாக நடந்துவிடும்.