மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும்: பாஜ மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பேட்டி

Share

வேலூர்: மேகதாது விவகாரத்தில்2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார்.பாஜக தேசிய மகளிரணி  தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று வேலூர் வந்தார். காட்பாடிக்கு ரயில் மூலம் வந்த அவரை மாநில செயலாளர் கார்த்தியாயினி, பாஜ மாவட்ட தலைவர் மனோகரன், பொறுப்பாளர்கள் சரவணன், ஜெகன், பாபு ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து வானதி சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜ பொறுப்பேற்று 8 ஆண்டுகளில் மக்கள் பயனடையும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பொதுக்கூட்டங்கள் மூலம் பாஜ அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கி வருகிறோம். ஆராய்ச்சி படிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்மூலம் ஏராளமான இளைஞர்கள் சாதித்துள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3வது மொழியாக அவர்களின் விருப்பமொழியை கற்றுக்கொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் 2மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும். நீதிமன்றம் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கு வழக்குகளை வழங்க தீட்சிதர்கள் தயாராக உள்ளனர்.

நூல் விலை உயர்வுக்காக பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்னையில் அமைச்சர்கள் நிர்மலாசீதாராமன், பியூஷ்கோயல் ஆகியோர் தலையிட்டதை தொடர்ந்து நூல் விலை குறைந்தது. நூல் விலை உயர்வுக்கு பதுக்கல்தான் காரணம். இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி விஷயத்தில் ஏற்கனவே உள்ள சட்டத்தை அமல்படுத்தினாலே போதுமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com