ஆஸ்திரேலிய அரசு உயிர்பாதுகாப்பில் (biosafety) மிகவும் கடுமையான விதிகளைப் பின்பற்றி வருகிறது. அங்கே குறிப்பிட்ட சில உணவுகள் மட்டுமே பயணத்தின்போது, நாட்டுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சமீபத்தில் பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணி, விமானத்தில் பயணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இறங்கிய பின் அவருடைய பைகளில் இரண்டு முட்டை, கொத்துக்கறி மற்றும் ஹம் க்ராய்சன்ட் (ham croissant) போன்ற உணவுகள் இருப்பது, மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பயணி விமான அதிகாரிகளிடம், தன்னிடம் மெக்டொனால்டில் இருந்து வாங்கிய உணவுகள் இருப்பதை மறைத்து, பொய்யான தகவல்களைக் கொடுத்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் வேளாண்துறை அமைச்சர் முர்ரே வாட் தெரிவிக்கையில், `மிகவும் விலையுயர்ந்த மெக்டொனால்டு உணவுகளில் இதுவும் ஒன்று. இந்த அபராத கட்டணம், பாலிக்கான விமானக் கட்டணத்தைவிட இருமடங்கு அதிகம். ஆனால், ஆஸ்திரேலியாவின் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கீழ்ப்படியாத நபர்களிடம் எனக்கு எந்த அனுதாபமும் இல்லை; ஏமாற்ற நினைத்தால் நீங்கள் பிடிபட்டு விடுவீர்கள் என்பதை சமீபத்திய சம்பவம் காட்டுகிறது’ எனக் கூறியுள்ளார்.