இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆரம்பக்கால கிரிக்கெட் பயணத்தின்போது, தான் சந்தித்த நிறவெறி பாகுபாடுகள் குறித்த தனது கசப்பான அனுபத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
“Indian Express’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் லஷ்மன் சிவராமகிருஷ்ணன், “என்னுடைய வீட்டில் கிரிக்கெட் தொடர்பான பொருள்கள் எதுவும் இல்லை. எனது விளையாட்டு கால நினைவுகளில் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் அந்த அளவிற்கான அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

ஒரு முறை மூத்த பேட்ஸ்மேன் ஒருவர் என்னை அழைத்து அவருடைய காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார். நான் அவரை நிமிர்ந்து பார்த்து ‘அது என் வேலையல்ல, நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களே செய்துகொள்ளுங்கள்’ என்று கூறினேன்.
அந்த கிரிக்கெட் வீரர், என்னை மைதான ஊழியர் என்று தவறாக நினைத்துக்கொண்டார். இனவாதம் அல்லது நிற பாகுபாடு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. இந்த மனிதர் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இது போன்ற நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.