மும்பை மாநகராட்சி தேர்தல் : எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஆளும் கூட்டணிகளில் தொடர் பஞ்சாயத்து?

Share

மகாராஷ்டிராவில் வரும் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் நேரடியாகவே சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இருவரும் பல முறை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய ராஜ் தாக்கரே வீட்டிற்கு உத்தவ் தாக்கரே மீண்டும் சென்றார்.

உத்தவ் தாக்கரே மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்றார். அங்கு இரு தலைவர்களும் பூட்டிய அறைக்குள் இரண்டு மணி நேரம் வார்டுகளை பங்கிட்டுக்கொள்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். உத்தவ் தாக்கரே கட்சிக்கு செல்வாக்கு இருக்கும் பகுதியில் ராஜ் தாக்கரே சில வார்டுகளை கறாராக கேட்கிறார்.

இதனால் வார்டுகளை பகிர்ந்து கொள்வதில் இரு தரப்பினருக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை இருந்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் பொதுவான கோட்டைகளான கருதப்படும் சிவ்ரி, ஒர்லி, மாகிம், பாண்டூப், தீண்தோஷி, மகதானே, பைகுல்லா மற்றும் காட்கோபர் போன்றவை இருப்பதால், இரு கட்சிகளுக்கும் இடையே வார்டுகளை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் இருந்து வருவதாக இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com