மும்பை: தென் ஆப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், மும்பை நகர் வீதியில் சிறுவர்களுடன் இணைந்து கல்லி கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்த டிவில்லியர்ஸ், பெங்களூருவில் ஆர்சிபி அணி நிர்வாகிகளை சந்தித்திருந்தார். தொடர்ந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கும் சென்றிருந்தார். பின்னர் மும்பை வந்திருந்த அவர், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார். அந்த படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றிருந்தன.
கடந்த அக்டோபர் வாக்கில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அறியப்படுபவர் டிவில்லியர்ஸ். மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 20,014 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகள் அடங்கும். 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்த சூழலில் மும்பையில் உள்ள மகாலட்சுமி பகுதியில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கல்லி கிரிக்கெட் விளையாடி உள்ளார். கல்லி கிரிக்கெட்டில் சிறுவர்கள் பயன்படுத்தும் பலகை போன்ற பேட்டை டிவில்லியர்ஸ் பயன்படுத்தி விளையாடி உள்ளார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.