”ஸ்குவின்ட் எனப்படும் மாறுகண் இருந்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையெல்லாம் அறிவியலுக்குப் புறம்பானது. சிலருக்கு ஒரு கண் மட்டும் மாறுகண்ணாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு இரண்டு கண்களும் மாறுகண்களாக இருக்கலாம். அதற்குப் பெயர் ‘ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்குவின்ட்’.
அதிர்ஷ்டம் என நம்பிக்கொண்டு இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்தால், மெள்ள மெள்ள குழந்தையின் பார்வையே பறிபோகலாம்” என்ற எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. மாறுகண் பாதிப்பு குறித்து அவர் அளிக்கும் விரிவான தகவல்கள்….

காரணங்கள்
பரம்பரைத்தன்மை
கண்தசைகள் பாதிக்கப்படுதல்
கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்
கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள்
தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் பார்வைக் குறைபாடு
காயம் படுதல்
மாறுகண் பாதிப்பில் பல விதங்கள் உண்டு.
ட்ரோபியா (tropia ) என்றால் மாறுகண் தொடர்ந்து தெரிந்துகொண்டே இருக்கும். போரியா (phoria) என்றால் எப்போதாவது மாறுகண் தெரிவது. அதாவது பாதிக்கப்பட்ட குழந்தை ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும்போதோ, களைப்பில் இருக்கும்போதோ மட்டும் மாறுகண் தெரியும். ‘குழந்தை நல்லாதான் இருக்கு. டயர்டா இருக்கும்போது மட்டும் கண் ஒரு பக்கமா போயிடுது’ என்று பெற்றோர் சொல்வதைக் கேட்கலாம்.
சென்சரி ஸ்குவின்ட் (Sensory squint) என்பது கண்கள் சரியாக வேலை செய்யாததால் ஏற்படும் பாதிப்பு.
மோட்டார் ஸ்குவின்ட் (motor squint) என்பது கண்களை மேலே, கீழே, பக்கவாட்டில் திருப்பும் தசைகளிலோ, நரம்புகளிலோ பாதிப்பு வருவதால் ஏற்படுவது.

‘கான்ஜெனிட்டல் ஈசோட்ரோபியா’
பிறக்கும்போதே சில குழந்தைகள் மாறுகண்ணோடு பிறக்கலாம். அதை ‘கான்ஜெனிட்டல் ஈசோட்ரோபியா’ (congenital esotropia) என்போம். அந்தப் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டால் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின் கண் சோம்பேறிக் கண்ணாக (amblyopia) மாறிவிடும். அதாவது கண்கள் எடுக்கும் படமானது மூளைக்குப் போகும்போது தெளிவாக இருக்காது.
இதைத் தவிர்த்து, குழந்தைக்கு ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ அதிக பவர் இருந்தாலும் மாறுகண் வர வாய்ப்புகள் அதிகம். அந்தப் பிரச்னைக்கு கண்ணாடி கொடுத்து சரி செய்ய முடியும்.
கண்களை இட, வலமாகவும், மேல், கீழாகவும் திருப்பும் பயிற்சியைக் கொடுப்பதன் மூலமும் மாறுகண் பாதிப்பை குணப்படுத்தலாம். அது மட்டும் போதாது. குழந்தைக்கு ஆரோக்கியமான, சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
மாறுகண் பிரச்னை, குழந்தையின் 8 வயதுக்குள் சரி செய்யப்பட வேண்டும். அப்படியில்லாவிட்டால் அந்தக் கண்ணில் பார்வையில் முன்னேற்றம் இருக்காது.
விழித்திரையில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலோ, கண்புரை இருந்தாலோ அந்தப் பக்கத்து கண், மூக்கின் பக்கமாகவோ, எதிர்ப்புறமாகவோ திரும்பக்கூடும். அதற்கு தசைகளின் பலவீனம் காரணமல்ல.
இவை தவிர்த்து பெரியவர்கள் சிலர் இரட்டைப் பார்வை மற்றும் மாறுகண் பாதிப்போடு வருவார்கள். கண்களைத் திருப்பும் தசைகள் செயலிழந்து போயிருக்கும். காரணம் அந்தத் தசைகள் அனைத்தும் மூளையோடு தொடர்புடையவை. எனவே மூளையில் கட்டி, பிரஷர் அதிகமாவது போன்றவை ஏற்பட்டால் நரம்பு அறுபட்டு, அதன் விளைவாக மாறுகண் பாதிப்போடு வருவார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிடி ஸ்கேன் எடுத்து, மூளையில் ஏதேனும் கட்டி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

கடைசித்தீர்வாக அறுவை சிகிச்சை
ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம். விழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.
இந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெற, தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறுகண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைசிகிச்சைக்குப் பிறகும் தொடர வேண்டியிருக்கலாம்.
பார்ப்போம்
ராஜலட்சுமி
பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்