உடல்நலமின்றி மருத்துவரை நாம் அணுகும்போது, மருத்துவர்கள் சில மருந்துகளை உணவுக்கு முன்னரும், சில மருந்துகளை உணவுக்குப் பின்னரும் உட்கொள்ள பரிந்துரைப்பார்கள்.
எல்லா மருந்துகளும் நோயைக் குணப்படுத்தத்தானே, பின் ஏன் இதுபோன்று பரிந்துரைக்கிறார்கள் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கக்கூடும். இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், கோவையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.
முதலில் நமது செரிமான அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உணவை, உமிழ்நீருடன் சேர்ந்து நன்கு மென்று சாப்பிடும்போது உணவுக்குழாய் மூலமாக அந்த உணவு இரைப்பைக்குச் செல்கிறது. அங்கு உணவானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் சில செரிமான நொதிகளுடன் சேர்ந்து, கூழ் போன்று மாற்றப்பட்டு சிறுகுடலுக்குள் செலுத்தப்படும்.
அங்குள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டின் மூலம் உணவு செரிமானமடைந்து, அதில் இருக்கும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களுக்குள் கலந்து உணவானது முழு ஆற்றலாக மாற்றப்படுகிறது.