இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். `உனக்குத்தான் லீவ் குடுத்தாச்சே, நீ வீட்டில் இரு. வேலைக்கு வராதே. வசதிகளைக் கேட்காதே’ என்று சில பணியிடங்கள் பெண்ணுக்கான வசதிகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இந்த விடுப்பை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஆபத்தும் வரலாம். மாதவிடாய் ஒரு நாளில் நின்றுவிடாது. குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இருக்கும். ஒருநாள் விடுப்பு முடிந்து, மாதவிடாய் தொடரும்போதும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும். எனவே, நாப்கினை வைத்துக்கொள்ள அலமாரி, போதுமான தண்ணீர் வசதி, நாப்கினை அகற்றும் வசதிகளுடன் கூடிய சுத்தமான கழிவறை (gender friendly toilet), ஓய்வறை உள்ளிட்ட பெண்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் பொதுசமூகமும், அரசும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.
மாதம்தோறும் பெண்களுக்கு வரும் ரத்தப்போக்கை, அசௌகர்ய நாள்களைக் கருத்தில் கொண்டு, `உன் நலனில் அக்கறை காட்டுகிறேன். நீ ஓய்வெடுத்துக் கொள்’ என்று பணியிடம் காட்டும் கரிசனம்தான், பரிவான செய்கைதான் மாதவிடாய் விடுப்பு. மாதவிடாய் விடுப்பு வேண்டும் என்று பணியிடங்களில் பேசத் தொடங்கும்போது, இது தொடர்பான தவறான கற்பிதங்கள் களையப்படும், மாதவிடாய் பற்றிப் பேசுவது அசிங்கமானதல்ல, அது பெண்ணின் உடலில் ஏற்படும் இயற்கையான நிகழ்வு என்ற இயல்பான தெளிவு வரும்.
பாலின சமத்துவத்தை நோக்கிய பாதையில் தொடர்ந்து பயணிக்க விகடன் குழுமத்துக்கு மீண்டும் வாழ்த்துகள் ! மாதவிடாய் விடுப்பு என்ற அவசியமான முன்னெடுப்பை மற்ற நிறுவனங்களும், அரசும் செயல்படுத்த முன் வர வேண்டும்.
– கீதா இளங்கோவன்