சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பாலும், நவம்பர் மாதம் பெய்த கன மழையினாலும் பாதிப்படைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. அனைத்துத்துறை ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், முன்களப் பணியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, இதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறது. நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போதைய மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட சூறைக்காற்று, கன மழையினால் எதிர்பார்த்த அளவு பாதிப்பு இல்லை. மேலும், மாண்டஸ் புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும், வீடுகள் உடமைகளை இழந்த மக்களுக்கும், மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டுமெனவும், கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
Share