அடிப்படையில் நமது இதயம் மற்றும் நுரையீரலின் தாங்கும் திறனைப் பொறுத்துதான் இது போன்ற மரணங்கள் நிகழ்கின்றன. இதயத்துக்கு அதிகப்படியான அழுத்ததைக் கொடுக்கும்போது மாரடைப்பு ஏற்படும். டிரெட்மில்லில் 15 நிமிடங்கள் ஓடினால்தான் அதற்குரித்தான பலன் கிடைக்கும். அதுவே, நம் அதீத ஆர்வத்தால் 45 நிமிடங்கள் ஓடினோம் என்றால் அது இதயத்துக்கு கொடுக்கும் அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்தி விடும். இது போன்று இறக்கிறவர்களுக்கு மது, புகைப்பழக்கம் இருந்தாக வேண்டும் என்றில்லை. எந்தப் பழக்கங்களும் இல்லாதவர்களுக்குக்கூட இது போன்று மரணம் சம்பவிக்கும். திரைப்பட நடிகர் ராஜ்குமார் நடைப்பயிற்சி சென்று திரும்புகையில்தான் இறந்திருக்கிறார். ஆகவே, மலையேற்றம் செல்கிறவர்கள் தங்களது இதயத்தின் தாங்கும் திறனைத் தெரிந்துகொண்டு அதிக அழுத்தத்தைக் கொடுக்காமல் செல்ல வேண்டும்.
மலையேற்றம் செல்கிற அனைவருமே மாரடைப்பு ஏற்படுகிறவர்களுக்கு தரும் சி.பி.ஆர் முதலுதவியை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கற்றுக்கொள்வது அவசியம். இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து இடப்புற மார்பில் இதயத்துக்கு மேல் பகுதியில் அழுத்த வேண்டும். பிறகு வாய் வழியாக சுவாசம் கொடுக்க வேண்டும். யாருக்கேனும் மாரடைப்பு ஏற்படுமாயின் சி.பி.ஆர் முதலுதவி மூலம் சிறிது நேரத்துக்கு மரணம் ஏற்படாமல் காக்க முடியும்” என்ற டாக்டர், மலையேற்றம் செல்லும் குழுக்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள Mountain safety kid குறித்துக் கூறினார்.
“குழுவாக மலையேற்றம் செல்கிறவர்கள் Mountain safety kid எடுத்துக் கொள்ளலாம். இதனுள் ஆஸ்துமா தொந்தரவுள்ளவர்களுக்கான இன்ஹேலர், விஷக்கடிக்கான மருந்துகள், மாரடைப்புக்கான முதலுதவி செய்யும் கருவி ஆகியவை அடங்கியிருக்கும். மலையேற்றத்துக்கு முன்பு உடலைத் தகுதிப்படுத்திக் கொள்வது நல்லது. புகை, மது போன்ற பழக்கங்களைத் தவிர்த்துவிட்டு போதுமான உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
மூச்சை இழுத்துப் பிடித்தல் மற்றும் பலூன் ஊதுதல் ஆகியவற்றைக் கொண்டு நம் நுரையீரல் மற்றும் இதயத்தின் தாங்கும் திறனைக் கண்டறியும் ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மேற்கொள்வது இன்னும் சிறந்தது. மலையேற்றத்துக்கான உடற்தகுதியற்றவர்கள் அதனைத் தவிர்த்து விடலாம். 45 வயதைக் கடந்து விட்டாலும் ஆண்டுதோறும் இதயப் பரிசோதனை மேற்கொள்வது நலம். இதயத்தின் தாங்கும் திறனைத் தெரிந்து கொண்டு அதற்கு அழுத்தம் தராமல் இருப்பது முக்கியம்.
அருவியில் குளிக்கையில் பயங்கரகுளிர்ச்சியான நீர் உடலில் படும்போது அதன் அதிர்வலைகள் மூளையைத் தாக்கி மூச்சடைப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக மாரடைப்புக்கு ஆளாகும் நிலை வருகிறது. தட்பவெப்ப நிலையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தடாலடியாக எடுத்த உடனே மூச்சடைக்கும் விதமாகக் குளிக்காமல் நிதானமாகக் குளிக்க வேண்டும்” என்கிறா சாய் சுரேந்தர்.