தேவையற்ற டெஸ்ட்டுகள் வேண்டாமே…!
இன்றைய வணிகமயமான மருத்துவச் சூழலில், கார்ப்பரேட் ஆய்வகங்களின் முடிவுகள் சில நேரங்களில் நோயாளிகளைத் தேவையற்ற பதற்றத்திற்கு உள்ளாக்குகின்றன. கார்ப்பரேட் ஆய்வகப் பரிசோதனைகளின் டெஸ்ட் ரிப்போர்ட்டில் மிகச்சிறிய மாற்றம் இருந்தால்கூட அதைச் சிவப்புக் குறியீட்டில் குறிப்பிட்டு, மக்களை பீதி அடையச் செய்வது நடக்கிறது. மருத்துவர் சொல்லாமலேயே, கூகுளில் தேடி, தாங்களாகவே தேவையற்ற டெஸ்ட்டுகளைச் செய்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். 35 வயது நபர் ஒருவர், தனக்கிருந்த அறிகுறிகளை கூகுளில் செக் செய்து, அது சொன்னபடி PSA (Prostate Specific Antigen) பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார். அந்த டெஸ்ட்டில் PSA அளவு சற்று அதிகமாக இருந்ததை மீண்டும் இணையத்தில் பார்த்துவிட்டு, தனக்குப் புற்றுநோய் என முடிவே செய்துவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாகப் பல மருத்துவர்களை மாற்றியும், ஆயிரக்கணக்கான யூடியூப் வீடியோக்களைப் பார்த்தும் நிம்மதி இழந்து தவித்தார். உண்மையில் அவருக்குப் புற்றுநோயே இல்லை. இன்டர்நெட் சொன்ன தவறான தகவல்களை நம்பி, அவர் தனது வாழ்நாளில் பாதியை பயத்திலேயே கழித்தார். இவரைப் போல நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்…” என்கிற டாக்டர் அருணாசலம், மக்களுக்கு அறிவுரைகள் சொல்லி முடிக்கிறார்.

மருத்துவரை நம்புங்கள்!
”மருந்து என்பது வெறும் ரசாயனம் அல்ல, அது மருத்துவர் மீதான நம்பிக்கையும் கூட என்பதை முதலில் நம்புங்கள். உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவரைத் தேர்ந்தெடுங்கள்.
மருத்துவரைத் தேர்ந்தெடுத்த பின், அவர் மீது முழு நம்பிக்கை வைத்து சிகிச்சையைத் தொடங்குங்கள். மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த ஆய்வகப் பரிசோதனையும் செய்யாதீர்கள்.
உங்களுக்கு மருந்து குறித்து சந்தேகம் இருந்தால் இணையத்திடம் கேட்காதீர்கள், உங்கள் மருத்துவரிடமே நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெறுங்கள். இணையம் உங்களுக்குத் தகவல்களைத் தரலாம்… ஆனால், அது ஒருபோதும் சிகிச்சை ஆகாது. சரியான நேரத்தில் சரியான மருத்துவ ஆலோசனை பெறுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு அஸ்திவாரம்” என்கிறார் டாக்டர் அருணாசலம்.