மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
அந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்திலும் முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியிருக்கிறார். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை குறைந்த விலையில் தொடர்ந்து வழங்க மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின்பகிர்மான நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கவேண்டும்.
அதன்படி, மின்சார (திருத்தம்) மசோதா 2022-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வருங்கால மின் தேவைக்காக வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டம், உடன்குடி விரிவாக்க நிலை-1 மற்றும் நிலை 3, உப்பூர் மிக உய்ய அனல் மின் திட்டம் என நிலக்கரி மின் திட்டங்கள் மூலமாக 8,340 மெகாவாட் திறன் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.