ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் சீனியர் மகளிர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ டிவிஷனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் மிசோரம் – தமிழ்நாடு அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 0-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. மிசோரம் அணி தரப்பில் தேவிகா சென் 2 கோல்களையும் டிம்பிள், லால்தன்ட்லுவாங்கி, தீபிகா, அன்டிம் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
கடலோர லீக் கால்பந்து போட்டி தூத்தூரில் இன்று தொடங்குகிறது
ரிலையன்ஸ் அறக்கட்டளை இளம் சாம்பியன் (ஆர்எஃப்ஒய்சி) சார்பில் கடலோர லீக் கால்பந்து போட்டிகள் இன்று (மார்ச் 8-ம் தேதி) தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூரில் தொடங்குகிறது. இந்த தொடர் யு-7, யு-9, யு-11 மற்றும் யு-13 ஆகிய நான்கு வயது பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இந்த லீக்கில் 14 அணிகள் இடம்பெறும். போட்டிகள் தூத்தூர் புனித ஜூட்ஸ் கல்லூரி மைதானத்தில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 13 ஆட்டங்களில் விளையாடும். சிறந்த செயல்திறன் கொண்ட அணிகள் நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறும். லீக் சுற்றுக்கு பின், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இதில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் லீக் கோப்பைக்காக மோதும். கடைசி 7 இடங்களை பிடிக்கும் அணிகள் வளர்ந்து வரும் கோப்பைக்காக மோதுவார்கள்.
உலக பாரா தடகள போட்டி இந்திய அணி அறிவிப்பு
உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் 90 பிரிவுகளில் போட்டிகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 20 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அணியில் பிரவீன் (உரயம் தாண்டுதல் டி 64), நவ்தீப் (ஈட்டி எறிதல் எஃப் 41), தரம்பீர் (கிளப் த்ரோ எஃப் 51), ரங்கோலி ரவி (குண்டு எறிதல் எஃப் 40) உள்ளிட்ட 145 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றள்ளனர். இவர்களுடன் 105 வெளிநாட்டு போட்டியாளர்களும் என மொத்தம் 250 பேர் பங்கேற்கின்றனர்.