ஈரோடு : மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று ஈரோடு கிழக்கு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘என் உயிரோடு கலந்தது ஈரோடு, பேரறிஞர் அண்ணா வாழ்ந்த ஊர், கலைஞர் குடியிருந்த ஊர்.பெரியார் பிறந்த மண் ஈரோடு, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன்.
திருமகன் ஈவெரா ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றினார்.திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வாக்குறுதியை நிறைவேற்றி பலர் பயன் அடைந்து வருகின்றனர்.ஆட்சி பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் ஒன்று.மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்பது இந்தியாவில் இல்லை. தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தி வருகிறோம்.
கோரிக்கை வைக்காமலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியர் கலைஞர்.ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். உயர்கல்வி செல்லும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரும் புதுமை பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.திமுக ஆட்சிக்கு வந்து 85% பணிகளை நிறைவேற்றியுள்ளோம்.நிதிநிலை சரியாக இருந்திருந்தால் பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்பட்டு இருக்கும்.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்.என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். நீட் விலக்கு மசோதாவை 2 முறை நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு ஆளுநரோ, ஒன்றிய அரசோ அதுபற்றி சிந்திக்கவே இல்லை.அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும்.வரலாற்று சிறப்புமிக்க ஈரோடு இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,’என்றார்.