பெக்கன்ஹாம்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக இந்தியா ஏ, இந்தியா அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் பெக்கர்ஹாமில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் வீரர்கள் மத்தியில் உரையாடுவதை பிசிசிஐ தனது இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் கவுதம் கம்பீர் கூறும்போது, “இந்த சுற்றுப்பயணத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று, மிகவும் அனுபவம் வாய்ந்த எங்களது 3 வீரர்கள் (ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்) ஆகியோர் இல்லாமல் இருக்கிறோம் அல்லது நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம்.
தற்போதைய டெஸ்ட் அணியில், ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பசி, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு இருப்பதை காண்கிறேன். நாம் தியாகங்களைச் செய்தால், நமது சவுகரியமான இடத்தில் இருந்து வெளியே வந்தால், ஒவ்வொரு நாளும் அல்ல, ஒவ்வொரு செஷனிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு பந்திலும் போராடத் தொடங்கினால், நாம் ஒரு மறக்கமுடியாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடியும்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான அழைப்புகள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை, எனவே பேட்டிங்கில் மூன்று மாதங்கள் அற்புதமான அனுபவத்தைக் கொண்ட சாய் சுதர்சனை வரவேற்க விரும்புகிறேன். நீங்கள் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை பெறுவதை உறுதிசெய்ய விரும்புகிறேன்.
அர்ஷ்தீப் சிங்கையும் வரவேற்க விரும்புகிறேன். வெள்ளை பந்தில் நீங்கள் அற்புதமாக செயல்பட்டுள்ளீர்கள். சிவப்பு பந்தை கையில் எடுத்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
முதல் முறையாக கேப்டனாக செயல்பட உள்ள ஷுப்மன் கில்லையும் வாழ்த்த விரும்புகிறேன். டெஸ்ட் அணியை வழிநடத்துவதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை. இப்போது தலைமைத்துவக் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் ரிஷப் பந்த்துக்கும் வாழ்த்துக்கள்.
இந்திய அணிக்குள் மீண்டும் வருவது ஒருபோதும் எளிதானதல்ல, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ஒருவர் (கருண் நாயர்), கடந்த ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நீங்கள் பெற்ற ரன்களின் எண்ணிக்கை, ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை, உங்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இது இந்த அணியில் உள்ள அனைவருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்று. அந்த வகையில் கருண் நாயரை வரவேற்கிறேன்” என்றார்.