இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒரே மாதிரியான சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்பட்டாலும், திருமணம், விவாகரத்து, சொத்து, தத்தெடுப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு மதமும் தங்களுக்கான தனி சட்டங்களைப் பின்பற்றிவருகின்றன.
தற்போது அதனை குறிவைத்து, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய பா.ஜ.க அரசு முனைப்பு காட்டுகிறது. கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில்கூட, பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இப்படியிருக்க,` தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் பா.ஜ.க-வினரைப் போல செயல்படுகின்றனர்’ என்ற விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், `பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கும் சமநீதியை வழங்கும்’ என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்திருக்கிறார்.