பெருநாள் – ரம்ஜான் சிறப்புச் சிறுகதை! | A special short story about the Ramzan Festival

Share

“தராவியா தொழுக இன்னைக்கு உண்டுமா இல்லியான்னு பெத்தா கேட்டு வரச் சொன்னா” என்றவாறே வந்தான் கரீம்.

“இப்பத்தானலே நோம்பு தொறந்திருக்கு. அதுக்குள்ள நஹரா அடிக்கணுமாக்கும். இன்னும் தேரம் இருக்குன்னு போய்ச் சொல்லுல” என்றார் வஹாப் சாஹிப். அவர்தான் வடக்குப் பள்ளிவாசல் தெரு ஜமாஅத் தலைவர். 

“எதுக்குக் கோபப்படுதியோ? சின்னப் பையன்தானே கேக்கான்?” என்றார் பானா பானா – ஆறிப்போன தேத்தண்ணியின் கடைசிச் சொட்டை நாக்கில் இட்டுச் சுவைத்தவாறே.

பாதுஷா பாவலரின் சுருக்கம்தான் பானா பானா. அவர் எப்போது பாவலர் ஆனார் என்பது இங்கே அவசியமில்லாத விஷயமென்றாலும்‌ அவரே அப்படிச் சொல்லிக் கொள்வார் என்றுதான் தெருவுக்குள் பேசிக் கொள்கிறார்கள். 

தலைவரை சமாதானப்படுத்துவதற்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அவர் மெல்ல எடுத்துக் கொடுக்கிறார் என்று அர்த்தம். வாழ்க்கையில் நல்ல பிள்ளை போல தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையென்பது‌போல இப்படித் தூண்டி விடும் அற்பர்களை நீங்களும் சந்தித்திருக்கலாம். இந்த வில்லங்க விஷங்களின்  சூட்சுமம் புரிந்தவர்கள் அதனைத் தவிர்ப்பார்கள். மற்றவர்கள் புரியாமல் நடனமாடுவார்கள் வஹாப் சாஹிபைப் போல.

“என்னவோய் பானா பானா… வெவரம் கெட்டத்தனமா பேசிட்டு கெடக்கீரு? பொறயப் பாத்த பொறவுதானே பெருநாளா இல்லயான்னு சொல்ல முடியும்? இப்பமே கேட்டா என்னத்த சொல்லச் சொல்லுதீரு?”

“இருக்குன்னு சொல்லுங்கோ அல்லது இல்லன்னு சொல்லுங்கோ. ரெண்டுமில்லாம எதுக்குக் கோபப்பட்டுக்கிட்டு? ” 

“ஆமா எங்கவூட்டு மெத்தயில பொற தெரியுது‌ பாரும். இருக்கு இல்லன்னு திடமா சொல்லதுக்கு. வெளங்காமப் பேசாம போரும்.”

பெருநாள் - சிறுகதை!

பெருநாள் – சிறுகதை!

“சரி சரி. கோபப்படாதிய. நோம்பு முடியுதுன்னாலே தன்னால கோபம் திரும்பவும் வந்துடும் போல” என்று பானா பானா பம்முவது போல நடித்தவர் அப்படியே கரீம் பக்கமாகத் திரும்பி, “சரிடே வா. தலைவர் கோவமா இருக்காரு. பொறவு பேசிக்கலாம்” என்றவாறே கரீமுடன் நடக்கத் தொடங்கினார். கரீமோ பாதி சமோசாவைத் தின்று முடிப்பதற்குள்ளாக பெருநாள் பற்றிக் கேட்டு வரச் சொன்ன கோபத்தில் அமைதியாயிருந்தான்.

“எலே கரீமு, என்னலே அமைதியா நடக்க? தலைவர் சொன்னது புரிஞ்சுதால?”

“அவங்கதான்‌ ஒண்ணும் சொல்லலியே” என்றான் கரீம் கடுப்புடன்

“பாத்தியா சின்னப் பயங்குறது சரியாத்தாம்ல இருக்கு. எலே! அவருட்ட தராவியா இருக்கான்னு கேட்டா இருக்கு இல்லன்னுதான சொல்லணும். வெளங்காப் பேச்சுன்னு திட்டுதாரு. பெரிய மனுசன்‌ பண்ணுத வேலயா இது? பெத்தா கிட்டப் போய்  அவரு திட்டுதாருன்னு சொல்லு. என்னா?” வாழைப்பழத்தில் கடப்பாறையைச் சொருகினார் பானா பானா.

கரீம் ஏழாவது படிக்கும் பையனென்றாலும் கொஞ்சம் விவரமானவன். ஒழுங்காக ஓதவலிக்கும் பள்ளிவாசலுக்கும் போய் வருபவன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com