
உடல் ரீதியான பிரச்னைகளை வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டுவதுண்டு. அப்படியான ஒரு பிரச்னைதான், சிறுநீர்த்தொற்று.

சிறுநீர்த்தொற்று என்பது பெண்களுக்கு அதிகம் வர வாய்ப்புள்ள, அதேசமயம் அவர்கள் அலட்சியப்படுத்தும் ஓர் உடல்நலப் பிரச்னை.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் சரியாகக் கழிக்க முடியாமல் வலி ஏற்படுவது, முழுமையாக சிறுநீர் கழித்த உணர்வின்மை போன்றவை சிறுநீர்த்தொற்றின் அறிகுறிகள்.

காரணங்கள்: தேவையான அளவு தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளாதது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பது. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு.

அதிகக் காரமான உணவுகளை எடுத்துக் கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறை சூழல் மற்றும் மலம் கழிக்கும்போது சரியாகச் சுத்தம் செய்யாதது, மேலும் காப்பர் – டி கருத்தடை சாதனம் பயன்படுத்தும் பெண்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, சோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, இந்தப் பிரச்னையில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம்.

4% முதல் 10% பெண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதால், அதைத் தவிர்க்கும் விதமாகவும், நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடனும் அதிகளவில் நீர் பருக வேண்டும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரினரி இன்ஃபெக்ஷன், ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதே சரியாகிவிடும். ஆனால், அது வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் பட்சத்தில், ரத்தம், சீழ் கசிவதுடன் மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு.

புதிதாகத் திருமணமான பெண்களுக்கு தாம்பத்தியக் காரணத்தால் சிறுநீர்த் தொற்று ஏற்படலாம். இது இயல்பானது மற்றும் மாத்திரை, டானிக் என்று எளிய சிகிச்சையில் குணப்படுத்தக்கூடியது.