மோசமான நோயால் ஒருவர் பாதிக்கப்படுகையில், அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து, வெறுப்பு, எரிச்சல், கோபம் என பல்வேறு குணங்களை வெளிப்படுத்துவதுண்டு. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயது நபர் ஒருவர் தனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத வேறொரு மொழியைப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் வசித்து வரும் 50 வயது நபர், புராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்ட இவர், அயர்லாந்து மொழியைச் சரளமாகப் பேசியிருக்கிறார்.
இவரது குடும்பம் அயர்லாந்தில் இல்லை. அந்த மொழி குறித்து அறிந்திராதபோதும், இவரால் அயர்லாந்து மொழியைப் பேச முடிந்துள்ளது. ஆராய்ந்ததில், ஃபாரின் அக்ஸன்ட் சிண்ட்ரோம் (Foreign Accent Syndrome – FAS) என்ற அரிய நிலையால் இவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அரிய நிலை குறித்து வட கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகமும், தென் கரோலினாவில் உள்ள கரோலினா யூராலாஜிக் ஆராய்ச்சி மையமும் இணைந்து ஆய்வுசெய்து அறிக்கை அளித்தது.
அதில், “எங்களுக்குத் தெரிந்தவரை புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி முதன்முறையாக ஃபாரின் அக்ஸன்ட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இவர் தனது 20-களில் இங்கிலாந்தில் வசித்து வந்தார். அயர்லாந்தில் இவருக்கு நண்பர்கள் மற்றும் தொலைதூர குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்படும் வரை, வெளிநாட்டு உச்சரிப்புடன் அவர் பேசியதில்லை.

அதோடு நரம்பியல் பரிசோதனைகளில் எவ்வித அசாதாரண பாதிப்பும் இல்லை. மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட வரலாறும் இல்லை. புற்றுநோயின் அறிகுறிகளின் தொடக்கத்தில் கூட மூளையில் அசாதாரண பாதிப்புகள் இருந்ததாகத் தெரியவல்லை.
இருந்தபோதும் அவரது உச்சரிப்பு கட்டுப்படுத்த முடியாததாக இருந்தது. அந்த உச்சரிப்பு படிப்படியாகத் தொடர்ந்து மாறியது. இவரின் நிலை மோசமடைந்த போதும், பல மாதங்கள் கழித்து அவர் இறக்கும் வரை இருந்தது.
கீமோதெரபி கொடுக்கப்பட்டபோதும், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தது. இதனால் பக்கவாதமும், பாராநியோபிளாஸ்டிக் நியூரலாஜிகல் பாதிப்பும் (paraneoplastic neurological disorder) ஏற்பட்டது.
இது புற்றுநோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்பு, மூளைப்பகுதி, தசைகள், முதுகுத்தண்டு ஆகியவற்றை பாதிக்கிறது. அதனால் குரலிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.