கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறை உதவிப் பேராசிரியராக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக வெள்ளி நானோ துகள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்குச் சாறில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டறிந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியள்ளது.
இது தொடர்பாக உதவிப் பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணனிடம் பேசினோம்.“செங்காந்தள் மலர் அல்லது கண்வலி கிழங்கு என்றழைக்கப்படும் தாவரத்தில் வேதியியல் பொருள் அதிகமாக உள்ளது. இது புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. 2018-ம் ஆண்டில் இருந்து இதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.

முதலில் செங்காந்தளின் வேதியியல் கூறுகளைப் பிரித்து வெள்ளி உலோகத்துடன் சேர்த்தோம். பிறகு அதை நானோ அளவில் துகள்களாக உருவாக்கினோம். நானோ துகள்களாக உருவாக்குவதன் மூலம் எளிமையாக புற்றுநோய் செல்களுக்குள் செல்ல முடியும்.
முதற்கட்டமாக ஆய்வகத்திலிருந்து புற்றுநோய் செல்களை வாங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டோம். செங்காந்தள் வேதியியல் கூறுகளினால் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்த முடிகிறது என்பதை கண்டுபிடித்தோம். அதன் பிறகு 2020-ம் ஆண்டு நானோ துகள்களுக்கு காப்புரிமை வழங்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது இதற்கான காப்புரிமை கிடைத்துள்ளது.
மேலும் எலியில் புற்றுநோய் செல்களை செலுத்தியதில் நானோ துகள்கள் நன்றாகவே வேலை செய்கின்றன. அடுத்தகட்டமாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறோம்.பு

மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், தொண்டை புற்றுநோய் என ஒரு சில புற்றுநோய் செல்களில் நானோ துகள்களைக் கொண்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களில் நானோ துகள்கள் நல்ல பலன்களை கொடுத்து வருகின்றன. இவற்றில் ஒன்றை இலக்காக வைத்து அடுத்தகட்ட ஆய்வை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இருக்கிறோம்.
இதற்கு தமிழ்நாடுஅரசும் நிதி வழங்கியுள்ளது. மனிதர்களின் பயன்பாட்டுக்கு இந்த நானோ துகள்களை கொண்டு வருவதற்கு சுமார் 2 முதல் 4 ஆண்டுகள் ஆகலாம்” என்றனர்.