சிலருக்கு, ஒவ்வாமை ஏற்படுத்தும் தூசியையோ பறவைகளின் எச்சத்தையோ மிகக் குறைவான அளவில் தொடர்ச்சியாக சுவாசிக்கும் சூழ்நிலை இருக்கும். இவர்களுக்கு நீடித்த நுரையீரல் அழற்சி (Chronic Hypersensitivity Pneumonitis) நோய் உருவாகிவிடலாம். இத்தகைய நிலையை அடைந்து, பின்னர் நுரையீரலில் நாளடைவில் அழற்சி நிலை முற்றி நுரையீரல் சுருக்கம் காண ஆரம்பித்து விடும். இதை Lung Fibrosis என்கிறோம்.
Lung fibrosis நிலையை அடைந்தவர்களுக்கு சுவாசப்பாதை சுருங்கி எப்போதும் இருமிக் கொண்டு இருப்பார்கள். போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில் இருப்பார்கள். இத்தகையோருக்கு ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகள், ஸ்பிரே மற்றும் சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள் தொடர்ந்து தேவைப்படும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் விசயங்களை சுவாசிக்காமல் தவிர்ப்பது பிரச்னையைக் கட்டுப்படுத்த உதவும். ஒருவேளை நுரையீரல் தொடர்ந்து அழற்சிக்குள்ளானால், தீவிர சுருக்க நிலைக்கு உள்ளாகி, மாற்று நுரையீரல் தேவைப்படும் நிலைக்குச் செல்லக்கூடும்.
அடங்காத இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணரை அணுகி அவரது பரிந்துரையின்படி நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், நுரையீரல் இயங்கு பரிசோதனை போன்றவற்றை செய்து, இந்த நோயை அடையாளம் காணலாம். முறையான சிகிச்சையைப் பெற்று நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.