வயிற்றுப்போக்கால் மரணம் விளைவிக்கும் நோய்த்தொற்று:
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் 2019-21-ல் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey – 5) முடிவின் வாயிலாக, அதிகளவு புட்டிப்பால் கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இந்திய அளவில், மூன்று வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் 21.9 சதவிகிதத்தினருக்கும், குறிப்பாக தமிழ்நாட்டில் 33% குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் புட்டிப்பால் கொடுக்கின்றனர்.
புட்டிபால் மூலம் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் புட்டிப்பால் கொடுக்கக் கூடாதென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, பால்புட்டியின் நிப்பளில் நோய்க்கிருமிகள் சேரக்கூடுமென்பதால், பால்புட்டி சரிவர கழுவப்படவில்லையென்றால், குழந்தைக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும்.
மேலை நாடுகளில், ஒவ்வொரு முறை பால்புட்டி உபயோகப்படுத்துவதற்கு முன்பு, ஸ்டெரிலைஸரில் போட்டு எடுப்பதால், புட்டிப்பால் மூலம் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் மிக குறைவு.
ஆனால், இந்திய ஏழை எளிய குடும்பங்களில், அந்த நோய்த்தொற்று தவிர்க்கும் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாததால், வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், புட்டிப்பால் கிடைக்கப்பெற்ற குழந்தைகளில் வருடந்தோறும் 26 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளில், வயிற்றுப்போக்கு ஏற்படுவதை அறிய முடிகிறது.