பாட்னா: பீகாரில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சுறுசுறுப்பாக நடந்தது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான பீகாரின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்றும் (டிச. 18), வரும் 28ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை வரும் 20ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை வரும் 30ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று 17 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 137 டவுன் பஞ்சாயத்துகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகராட்சித் தேர்தல் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமும், மற்ற இடங்களில் வாக்குப்பதிவு பெட்டி முறையும் பின்பற்றப்பட்டது.
கடந்த அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்ட நிலையில், நீதிமன்ற வழக்குகளால் தள்ளிபோனது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது, பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் நிலையில், தற்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தல் அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.