`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கேள்வி: டாக்டர், எனக்கு 37 வாரத்தில டெலிவரி ஆயிடுச்சு. பிறக்கும்போது, மகனோட எடை 2.550 கிலோவா இருந்துச்சு. நாலாவது நாள் டிஸ்சார்ஜ் ஆனபோது, அவனோட எடை 2.4 கிலோ. அவனோட எடை எப்ப அதிகரிக்க ஆரம்பிக்கும்? ஒரு நாளைக்கு எவ்வளவு எடை ஏறணும்? தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்குதான்னு எப்படித் தெரிஞ்சுக்கிறது?
அனைத்து குழந்தைகளுக்கும், முதல் வாரத்தில் நீரிழப்பின் காரணமாக எடையிழப்பு ஏற்படும். முதல் 7 நாள்களில் நிறைமாத பச்சிளங்குழந்தைகள் தனது எடையில் 7-10% வரையும், குறைமாத பச்சிளங்குழந்தைகள் தனது எடையில் 15% வரையும் இழப்பார்கள். முதல் வாரத்திற்குப் பிறகு, எடை கூட ஆரம்பித்து 10-14 நாள்கள் முடிவில், தனது பிறந்த எடையை அடைவார்கள். எனவே, உங்கள் குழந்தையின் எடையிழப்பு இயல்பானதே. எனினும், எடையிழப்பு ஒரே நாளில் 2% -க்கு மேல் இருந்தால், தாய்ப்பால் சரியாகக் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.