பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி | french open tennis: sania mirza out

Share

செய்திப்பிரிவு

Last Updated : 02 Jun, 2022 07:23 AM

Published : 02 Jun 2022 07:23 AM
Last Updated : 02 Jun 2022 07:23 AM

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயினின் ரபேல் நடால்.

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்த்து விளையாடினார். 4 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 13 முறை சாம்பியனான ரபேல் நடால் 6-2, 4-6, 6-2,7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 15-வது முறையாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நடால், ஜோகோவிச் மோதிய ஆட்டம் பிரான்ஸ் நேரப்படி 31-ம் தேதி இரவு 9.02 மணிக்கு தொடங்கி ஜூன் 1-ம் தேதி அதிகாலை 1.16 மணி அளவில் முடிவடைந்தது. பிரெஞ்சு ஓபன் தொடரில் ஜோகோவிச்சுக்கு எதிராக நடால் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். ரபேல் நடால் அரை இறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதுகிறார்.

ரபேல் நடால் கூறும்போது, “ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சவால்தான். அவருக்கு எதிராக வெற்றி பெற வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான் உள்ளது. முதல் புள்ளியில் இருந்து கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

சானியா தோல்வி

மகளிருக்கான இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லூசி ஹ்ரடேக்கா ஜோடி அமெரிக்காவின் கோகா காஃப், ஜெசிகா பெகுலா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா மிர்சா ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com