`தமிழ்மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டேன்!’ – ராகுல் காந்தி:
தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு செங்கோலையும் கையில் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி ஸ்கோர் செய்த நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தியும் தன் பங்குக்கு தமிழ்மொழி மீதான பற்றை நாடு கடந்து பொழிந்திருக்கிறார். பத்து நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நமது அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்தின் மொழி, வரலாறு, கலாசாரம் ஆகியவை அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவரையில் அதுதான் நடைமுறை. ஆனால், பா.ஜ.வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து இந்த நடைமுறை மற்றும் அரசியலமைப்பின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில், தமிழர்களுக்கு தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. அது அவர்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்வியல் முறை! எனவே, தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். என்னைப்பொறுத்தவரையில் தமிழ்மொழியை அச்சுறுத்துவது, இந்தியக் கொள்கையையே அச்சுறுத்துவதற்கு சமம்!” என அதிரடியாகப் பேசியிருக்கிறார்.
`நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேசியகட்சிகள் வடமாநிலங்களில் செய்வதைப்போன்ற அரசியலைத் தென்மாநிலங்களில் செய்யமுடியாது. அது எடுபடாது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநில மக்கள் தங்களின் தாய்மொழிமீது பிரிக்கமுடியாத பிணைப்பைக் கொண்டவர்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் தமிழை கையிலெடுக்காவிட்டால் எந்த கட்சிக்கும் அரசியல் இல்லை என்பதை எல்லா கட்சிகளும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமாக நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றெடுக்க வேண்டுமெனில் முதலில் தமிழக மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டும். அதற்குத்தான் இரண்டு தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழ், தமிழர்கள் என தேர்தல் நேர கூப்பாடு போடுகிறார்கள்’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!