சென்னை, அரசுப் பள்ளியில் `தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு’ என்கிற பெயரில் `பாவம்’, `புண்ணியம்’ குறித்து பிற்போக்குத்தனமாகப் பேசி, சர்ச்சைக் கிளப்பிய `பரம்பொருள்’ அறக்கட்டளையின் நிறுவனர் மஹா விஷ்ணு என்பவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், “போன ஜென்மத்தில் `பாவம்’ பண்ணியிருந்தால் அவர்களுக்கு மகன்கள் மட்டுமே பிறப்பார்கள். புண்ணியம் பண்ணியிருந்தால்தான் பெண் குழந்தைகள் பிறப்பார்கள்’’ என்று அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசிய காணொளியும் படுவைரலாகி, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்தக் காணொளியின் பின்னணிக் குறித்து விசாரித்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி இப்படி பேசியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் உட்பட பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.