
`உலக பக்கவாத தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

ரத்தக் குழாய்கள் தாமாகவே பிரச்னைக்குள்ளாகி, அவற்றில் அடைப்பு ஏற்பட்டால் அதற்குப் `த்ராம்போசிஸ்’ (Thrombosis) என்று பெயர். இதயத்தில் இந்தப் பிரச்னை வந்தால் அதை `கொரோனரி த்ராம்போசிஸ்’ என்போம். அதுவே மூளையில் வந்தால் `த்ராம்போட்டிக் ஸ்ட்ரோக்’ (Thrombotic stroke).

`ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக்’ (Transient Ischemic Attack – TIA) என ஒருவகை பாதிப்பும் உண்டு. `ட்ரான்சியென்ட்’ என்றால் தற்காலிகம் என்று பொருள். `இஸ்கெமிக்’ என்றால் ரத்த ஓட்டம் குறைவது. இதில், சில நொடிகள் முதல், சிலமணி நேரம் வரை பக்கவாதம், மரத்துப்போவது, தலைசுற்றல், ஒரு கை அல்லது காலில் உணர்ச்சியே இல்லாதது போன்றவை வந்து, தானாகச் சரியாகிவிடும்.

தற்காலிக ஸ்ட்ரோக், அடுத்து ஒருவருக்கு நிரந்தர ஸ்ட்ரோக் வரலாம் என்பதற்கான அறிகுறி. எனவே, அதை அலட்சியமாக நினைக்காமல் முறையான சிகிச்சை அவசியம்.

அறிகுறிகள்: முகத்தில் திடீரென ஏற்படும் மரத்துப்போகிற உணர்வு. குறிப்பாக ஒரு பக்கத்தில். பேசுவதில், புரிந்து கொள்வதில் ஏற்படுகிற திடீர் குழப்பம்.

பார்வையில் குழப்பநிலை, நடப்பதில் சிரமம், நிலைதடுமாறிய நிலையை உணர்தல், திடீரென ஏற்படும் காரணமற்ற தீவிர தலைவலி. இவற்றை உணர்ந்தால் உடனடியாக அவசர சிகிச்சை மருத்துவரை நாட வேண்டும்.

சிகிச்சைகள்: `த்ராம்போட்டிக்’ மற்றும் `எம்பாலிக்’ ஸ்ட்ரோக்குகளுக்கு டிபிஏ (TPA) எனும் மருந்தை, ஸ்ட்ரோக் பாதித்த அடுத்த நான்கரை மணி நேரத்துக்குள் கொடுத்துவிட்டால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். இந்த விஷயத்தில் நேரம் மிக முக்கியம்.

ஆனாலும், TPA மருந்து, ‘ஹெமராஜிக் ஸ்ட்ரோக்’குக்கு பலன் தராது. ஸ்ட்ரோக் பாதித்த எல்லோருக்கும் இதைக் கொடுக்க முடியாது. சில டெஸ்ட் செய்து, அதற்கேற்பவே கொடுக்கப்படும். அப்படிக் கொடுக்கும்போது பக்கவாதத்தின் தீவிரத்தைக் குறைக்கவோ, சிலருக்கு அதை முழுதும் ரிவர்ஸ் செய்யவோ முடியும்.

அறுவை சிகிச்சை அவசியமா? சிலருக்கு அடைப்பு பெரிதாக இருந்தால் TPA மருந்தை கொடுத்து, இன்டர்வென்ஷனல் நியூராலஜி எனும் முறையில் ரத்தக்குழாயினுள் கதீட்டரை செலுத்தி, அடைப்பை அகற்றுவார்கள்.

இதயத்துக்குள் ஸ்டென்ட் வைப்பது போல, மூளையிலும் ஸ்டென்ட்டிங் பண்ணலாம். ‘ஹெமராஜிக் ஸ்ட்ரோக்’ பாதித்தவர்களுக்குத்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

ஹார்ட் அட்டாக் போலவே ஸ்ட்ரோக்கும் மீண்டும் வர வாய்ப்புகள் உண்டு. எனவே, ஒருமுறை வந்ததும் வாழ்வியல் மாற்றங்களில் கவனம் அவசியம். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, உடற்பயிற்சி போன்ற சிகிச்சைகள்தான் பிரதானம்.