பின்னர், இந்த வழக்கானது விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம். அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சீனிவாசன் (முன்னாள் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர்), பழங்குடியின சமூக பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
கடந்த மே மாதம் 16ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, காவல் ஆய்வாளர் சீனிவாசனின் அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி பாக்கியஜோதி. மேலும், அவர் கைதுசெய்யப்படலாம் என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்த நிலையில், அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன், தனது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்ததும் அவசர, அவசரமாக நீதிமன்றத்திலிருந்து வெளியேறி தலைமறைவாகினார். இந்தச் சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதோடு, ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், 6 மாதங்கள் கழித்து இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த சீனிவாசன், ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பாக்கியஜோதி, வரும் 21-ம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தவிட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸார் சீனிவாசனைக் கைதுசெய்து அழைத்துச் சென்று வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.