அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்:
29-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளில், பிறந்ததில் இருந்து 2, 6, 12, 24, 48 மற்றும் 72 மணி நேரத்தில் ரத்தச் சர்க்கரை அளவினை (ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை) கண்டறிய வேண்டும். இவ்வாறு, ரத்தச் சர்க்கரை குறைவு அபாயமுள்ள பச்சிளங்குழந்தைகளில் செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை மூலம், எவ்வித அறிகுறிகளும் தென்படுவதற்கு முன்னால் ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்பட்டால், அதனை அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு என்கிறோம்.
குளுக்கோஸ் மானி/ குளுக்கோமீட்டர் (Glucometer) மூலம் இவ்வாறு செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனையில், அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்படும்போது, ரத்தச் சர்க்கரை அளவு 20-40 mg/dL எனில், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தையால் சரிவர தாய்ப்பாலை சப்பிக் குடிக்க முடியவில்லையென்றால், விரல்களால் தாய்ப்பலைப் பீய்ச்சி (expressed breast milk), பாலாடையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஒருவேளை, போதுமான அளவு தாய்ப்பால் வரவில்லையென்றால், பாலாடையில் பவுடர் பாலை அளிக்கலாம்.
அதன்பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, குழந்தையின் ரத்தச் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். மீண்டும் பார்க்கப்பட்ட ரத்தச் சர்க்கரை அளவு 40 mg/dL-க்கு மேலென்றால், அதன்பிறகு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மற்றும் அடுத்த 48 மணிநேரத்திற்கு, 6 மணிநேரத்திற்கு ஒரு முறையென ரத்தச் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மாறாக மீண்டும் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரையின் அளவு 40 mg/dL-க்கு கீழ் என்றால், ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் (IV Dextrose)-ஐ மருத்துவர் தொடங்குவார்.