உலக சுகாதார மையம் சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டயட் கோக், டயட் பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பை எடுத்துக் கொள்வதால் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாக்ஷி பஜாஜிடம் பேசினோம்.
அவர் “இயற்கையான சர்க்கரையில் இருக்கும் ஊட்டச்சத்தும் கலோரிகளும் செயற்கையான இனிப்பில் இருப்பதில்லை. ஆனால் அதிகளவான இனிப்புச்சுவை இருக்கிறது. சுக்ரோலோஸ், அஸ்பார்டேம், சைக்லேமேட், சல்பேட் பொட்டாசியம் போன்ற செயற்கை இனிப்பு வகைகள் மார்க்கெட்டில் இருக்கின்றன.
அஸ்பார்டேம் பொறுத்தவரை 40 மில்லிகிராம் நம்முடைய உடல் எடைக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளலாம். இது சூயிங்கம், குளிர்பானங்கள் போன்றவற்றில் இருக்கும். எந்தவித உடல் பிரச்னைகளும் இல்லாதவர்கள் குறைந்தபட்ச அளவில் அஸ்பார்டேம் எடுத்துக்கொள்ளாலாம் என்று உலக சுகாதார மையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால் கர்ப்பிணிகளும், phenylalaninemia பாதிப்பு இருப்பவர்களும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
பொதுவாகவே செயற்கை இனிப்புகள் எடுத்துக் கொள்வது குடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும். குடலில் ஏற்படும் பிரச்னைகளால் நீரிழிவு நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 2022-ம் ஆண்டு வெளியான மருத்துவ இதழ் ஒன்றில் வெளிவந்த ஆய்வறிக்கையில் செயற்கை இனிப்புகள் எடுத்துக் கொள்ளும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது.