இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரும், அவரின் செல்லப் பிராணி நாயும், சிறிது மாத கால இடைவெளியிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தில் வசித்து வரும் சைமன் ஓ’பிரியன் என்பவர், பெல்லா என்ற லேப்ரடார் (Labrador) வகை நாயினத்தை வளர்த்து வந்துள்ளார். 8 வயதாகும் இந்த நாய்க்கும், இவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இருவரும் அதிக சோர்வாகவும், தாக உணர்வோடும் இருந்துள்ளனர்.
சிறுநீரகத்தில் கட்டி உருவான நிலையில், பரிசோதனை செய்ததில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். முதலில் நாய் பாதிக்கப்பட்டிருப்பதையும், சிறிது காலத்திற்குப் பின் தனக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சைமனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏழு மணிநேர சிகிச்சைக்குப் பின்னர், அவரது சிறுநீரகம் அகற்றப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அவரது நாய்க்கு அறுவை சிகிச்சை செய்வது இன்னும் ஆபத்தை அதிகப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், இன்னும் சில நாள்களே பெல்லா உயிர்வாழப் போகிறது.