“நான் கொடுத்து பழகிட்டேன், அவங்க குடிச்சி பழகிட்டாங்க. அதனால, இந்தக் கடையை விட முடியலை. என்னைத் தேடி வர்றவங்களை ஏமாத்தக்கூடாதுன்னுதான் இன்னைக்கும் பாயாசக்கடையை போட்டுக்கிட்டு இருக்கேன்” என்று கூறி நெகிழ வைக்கிறார் சின்னதுரை.
அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்,
“30, 40 வருஷத்துக்கு முன்னால எல்லாம், இங்க சுத்திலும் கடைகளா இருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். காய்கறியில இருந்து ஜவுளி, பேன்ஸி, கருவாடு வரைக்கும் எல்லாமும் ஒரே இடத்துல கிடைக்கும். நூற்றுக்கணக்கான மூட்டைகள்ல பச்சை காய்கறிகள், தேங்காய் எல்லாம் வந்து இறங்கும்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடியிலயிருந்து எல்லாம் வியாபாரிகள் இங்க வந்து மொத்தமா வாங்கிட்டுப் போவாங்க. விவசாயிங்க பலரும் நேரடியா சந்தையில விற்பனை செய்வாங்க. பக்கத்து ஊர்கள்லயே இன்னைக்கு கமிஷன் கடைங்க அதிகம் வந்து சந்தையை எல்லாம் காலி பண்ணிட்டாங்க. நான் மட்டும்தான் கிட்டத்தட்ட 35 வருஷமா இங்க தொடர்ந்து, கடை போட்டுக்கிட்டு இருக்கேன். எப்பவாது மீன் கடை வரும். அப்பவும் சரி, இப்பவும் சரி என்னோட சேமியா பாயாசத்தை குடிக்கிறதுக்குன்னே ஒரு கூட்டம் வரும். ஆரம்பத்துல சந்தை கூட்டம் இருக்கப்ப, எனக்கு நல்ல லாபம் கிடைக்கும்.