நாடோடிச் சித்திரங்கள்: `பயணியை கதை சொல்லியாக மாற்றிய இடும்பி வனம்’ | பகுதி 42 | Nadodi chithirangal, a travel to Idumbi vanam, Part 42

Share

மலையின் இருளை விழுங்கும் சூரியனின் முதற் கதிரை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தூரத்து மலைகள் ஒவ்வொன்றாக பொன்னிறம் சூடுவதைக் கண்ட தேவதாரு மரத்து பறவைகள் பரவசக் கூச்சலிட்டன. மரக்கிளைகளில் ஊஞ்சலாடித் திளைத்தபடி அவை ஒன்றுடன் ஒன்று உரையாடிக் கொள்வது போல் கிறீச்சிட்டு பேசின. வானம் முழுவதுமாக வெளுத்து விடுவதற்குள் பறவைகள் கூடுகளைத் துறந்து பறக்கத் துவங்கின. நுனிக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பறவை மட்டும் எதற்காகவோ காத்திருப்பது போல் ஆயத்தமாக அமர்ந்திருந்தது. அதன் உடலின் வண்ணக் கோர்வை பார்வைக்கு வசீகரமாக இருந்ததால் கதிரொளி பிரகாசத்தில் அப்பறவை மட்டும் மாய பறவை போல் மிளிர்ந்தது. அது நிஜ பறவைதானா அல்லது எனது கற்பனை வீச்சின் பிம்பமா என்று ஐயமுறும் விதத்தில் அதன் தோற்றமும் பொலிவும் இருந்தது. தேவதாரு மரம் ஒருவழியாக அமைதி கண்டது. இனி அந்தி சாயும் வரை அது இளைப்பாறிக் கொள்ளலாம் போன்றதோரு அமைதி அங்கு நிலவியது. பொன்னிற பறவை மட்டும் அதே கிளையில் அப்படியே அம்ர்ந்திருந்தது. பறப்பதற்கான ஆயத்தம் அதனிடம் தெரிந்தது. ஏதோ ஒரு சமிஞை அல்லது ஏதோ ஒரு அழைப்பிற்காக அது காத்திருந்தது. வெகுநேரமாக அதையே பார்த்துக் கொண்டிருந்த நான், அறைக்கு திரும்ப எண்ணிய பொழுதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

தூரத்து மலையிலிருந்து ஒரு அழைப்பொலி. நானும் அந்த பறவையும் ஒரே நேரத்தில் ஒலி வந்த திசையை ஏறெடுத்துப் பார்த்தோம். அவ்வொலி நீண்டு குறைவதற்குள் பொன்னிற பறவை கிளையில் காலூன்றி வானில் ஏகியது. அதன் சிறகுகள் செந்நிறம் கொண்டிருந்தன. நான் அப்பறவையின் சிறகு விரித்தலை அணு அணுவாக இரசித்துப் பார்த்தேன். காத்திருப்பின் மொத்த வலியையும் அது தனது பறத்தலுக்கான விசையாக மாற்றிக்கொண்டு பறந்ததை உணர முடிந்தது. பறவையை வழியனுப்பிவிட்டு திரும்பினேன். அப்பொழுது காற்றில் தவழ்ந்து வந்த செந்நிற இறகொன்று என் தோள்மீது அமர்ந்தது.

அவ்விறகினை கவனமாக இரண்டு கைகளுக்குள்ளும் அமர்த்தி பிடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன். விடுதி பணியாளர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நான் இறகை கவனமாக புத்தகத்திற்குள் வைப்பதைப் பார்த்த அவர் “இது ஹடிம்பாவின் தூதுவனின் இறகு” என்றார்.

‘ஹடிம்பா’, அப்பெயரை முதன்முறையாக அப்பொழுதுதான் கேள்வியுற்றேன். ஹடிம்பா யாரென்று அவரிடம் வினவினேன். “எங்கள் வன தேவதைகளின் மூதாட்டி அவள், பீமனின் காதல் மனைவி, மணாலி அருகே ஹடிம்பா வனத்தில் அவளது காற்தடம் பதிந்த பாறை இருக்கிறதே, நீங்கள் அதனை கண்டு வரவில்லையா” என்று ஏமாற்றம் கலந்த தொனியில் கேட்டார். பீமனின் காதல் மனைவி என்கிற அடையாளம் ஹடிம்பா தேவியை இடும்பி என்று எனக்கு உணர்த்திற்று.

” சரி, அந்த பறவையை ஏன் இடும்பியின் தூதுவன் என்றீர்கள்” என்றேன்.

“ஆம் அது அவளது தூதுவன்தான். துயரம் தாக்கிய மனிதர்களை இடும்பிக்கு அடையாளம் காட்டுவதுதான் அந்த தூதுவனின் பணி. அடையாளம் கண்ட இடத்திற்கு இடும்பி சென்று அம்மனிதர்களின் துயர் போக்குவாள்” என்றார் அவர்.

“அப்படியென்றால் இடும்பி மாயவித்தைகள் அறிந்த மந்திரகாரியா” என்றேன்.

“அல்ல, அவள் ஒரு கதைசொல்லி. அவள் தனது கதைகளால் மனிதர்களின் துயர் துடைப்பாள். சமயங்களில் அக்கதைகளை தாலாட்டு போல் பாடி குழந்தைகளின் மூளைக்குள் முளைக்கும் துர்கனவுகளை ஒவ்வொன்றாக களைந்தெறிவாள். இடும்பியின் கதை கேட்டு உறங்கும் குழந்தைகள் அதன் பிறகு எதனிமித்தமும் வாழ்வில் கலங்குவதில்லை. அவளது கதைகளுக்கு வல்லமையை விதைக்கும் இயல்புண்டு” என்று வாஞ்சையாக அவர் கூறியதை கேட்கையில் இடும்பி வனத்திற்கு செல்ல மனம் ஆவல் கொண்டது.

நாடோடிச் சித்திரங்கள்

நாடோடிச் சித்திரங்கள்

இடும்பி மகாபாரத பீமனின் மனைவியாக பரவலாக அறியப்பட்டாலும், மணாலி மற்றும் அப்பகுதியின் மலைவாழ் மக்கள் அனைவரும் தங்களது குலத்தின் மூத்த தாயாகவே அவளை வணங்குகின்றனர். மலைகிராமங்களின் மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட தீராத நோயை குணப்படுத்திய வனமக்களின் தலைவியான இடும்பிக்கு மன்னர் தங்களது அரியணைக்கு செலுத்தும் முதல் மரியாதையை இடும்பியிடமிருந்தே பெற்றதாகவும் பருவமழை முடிந்து நடவு துவங்கும் பொழுது இடும்பியின் நெற்கலனிலிருந்தே முதல் விதைநெல் பெறப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com