நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 9-ம் வகுப்பு பயின்று வந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் திடீரென மாயமானதாக சிறுமிகளின் பெற்றோர் ஊட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், மாயமான சிறுமிகள் இருவரும் கோவையில் இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு விசாரித்திருக்கின்றனர். மாயமான காரணத்தை சிறுமிகள் தெரிவித்ததைக் கேட்ட, காவல்துறையினர் திகைப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், ” இரண்டு சிறுமிகளின் பெற்றோரும் கூலித் தொழிலாளர்கள் தான். சிறுமிகள் இருவருமே நடனக் கலையில் அளவுக்கு அதிகமாக நாட்டம் கொண்டிருக்கின்றனர். இணையத்தில் நடன நிகழ்ச்சிகள், நடன பயிற்சிகளை அதிகமாக பார்த்து வந்திருக்கின்றனர். பி.டி.எஸ். என்ற பிரபல தென்கொரிய ஆல்பம் நிகழ்ச்சிகளை செல்போனில் தொடர்ந்து பார்த்து வந்த மாணவிகள் இருவரும் தென் கொரியா சென்று இதேபோல் நடனம் கற்றுக் கொண்டு, மீண்டும் நீலகிரிக்கு திரும்ப நினைத்திருக்கின்றனர்.