கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவு ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணைவீட்டில் வைத்து ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார். அதன்படி இன்று மதியம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் ஆயிரம் பேர் ஓ.பி.எஸ் பண்ணைவீட்டிற்கு வந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஜூன் 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு முறையாக நடக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தற்காலிக அவைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான முன்மொழிவை நான் செய்யவேண்டும். அதை இணை ஒருங்கிணைப்பாளர் வழிமொழிந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த வரைமுறைகூட நடக்கவிடாமல் ரெளடிகளும், கேடிகளும் கூச்சலிட்டு கூட்டத்தையே அவமதித்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தீர்மானங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு வாசிக்கப்பட இருந்தநிலையில் சி.வி.சண்முகம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது வரம்புமீறிய செயல்.