தேமுதிக எழுச்சியாகத்தான் உள்ளது: பிரேமலதா பேச்சு

Share

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அனைத்துக்கட்சி தலைவர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாளையொட்டி நேற்று பகல் 12 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்தார். இதனால், கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் விஜயகாந்தை பார்த்ததும் உற்சாகம் அடைந்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை பார்த்து கை அசைத்த விஜயகாந்த் தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது, கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட பலர் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா,  ‘‘விஜயகாந்த் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அவரது பிறந்த நாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மட்டும் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கவில்லை. அவரை மனித நேயமிக்கவராக ஒட்டுமொத்த மக்களும் பார்க்கிறார்கள். எங்கள் கட்சி எழுச்சியாக தான் இருக்கிறது. அனைத்து போராட்டத்திற்கும் குரல் கொடுக்கும் முதல் கட்சியாக தேமுதிக இருக்கிறது. நடிகர் கார்த்தி நடிகர் சங்கம் சார்பாக வாழ்த்து கூற வந்தார். அவருக்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’’ என கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com