கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பது ஐதிகம்.
வழிவிடும் முருகன் கோயிலின் அருகே, மலைக்கு மேல் போகிற வாகனங்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள்.

ஒரு த்ரில்லிங்கான பயணம்
மேகமலை முருகன் கோயிலை அடையப் பல கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டும். போகப் போக 20 அடிகளாகக் குறுகிவிடுகிறது பாதை. பேருந்து மெள்ள மெள்ள ஊர்ந்துதான் செல்லவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டும்தான் செல்ல முடியும். சாலையை ஒட்டி காணப்படும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் வனத்தின் அழகும் நம்மை ஆச்சரியப்படவைப்பதுடன், சற்றே அச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஆனால், வழிவிடும் முருகப்பெருமானின் கருணையால், இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார்கள் ஊர் மக்கள்.
சுமார் ஒரு மணி நேர மலைப் பாதைப் பயணத்துக்குப் பிறகு மேகமலையின் தொடக்கத்திலேயே நம்மை வரவேற்கிறது அருள்மிகு கௌமாரியம்மன் கோயில். இங்குள்ள கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருத்தி. முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள்.