தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸி. சுருண்டதில் வியப்பு ஏதுமில்லை… ஏன்? | No wonder that australia crushed by South Africa explained

Share

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்குச் சுருட்டியதில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் இதற்கு முதல் தொடரில் பும்ரா அண்ட் கோ ஆஸ்திரேலிய பேட்டிங்கை கலங்கடித்ததனால் ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா பேட்டிங் சரிவுக்கு ஆஸ்திரேலியாவின் துல்லிய பவுலிங் மட்டும் காரணமல்ல.

ஐசிசி ஃபியூச்சர் டூர் புரொகிராம் என்னும் ஷெட்யூலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே அதிக டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. மற்றபடி தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், மே.இ.தீவுகள் போன்ற நாடுகளுக்கு அவ்வளவாகப் போட்டிகள் நடைபெறுவதில்லை ஒன்று அவர்கள் அவர்களுக்குள் ஆடுகிறார்கள், அல்லது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் குறைந்த அளவிலேயே மோதுகின்றனர்.

நல்ல தரமான பிட்சில் தரமான பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுவதற்கு கொஞ்சமாவது அவர்களுடன் ஆடும் பழக்கம் வேண்டும். அந்தந்த நாட்டு உள்நாட்டுக் கிரிக்கெட்டும் தனியார் டி20 லீகுகளால் சீரழிந்து கிடப்பதால் அந்தக்காலம் போல் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் சவாலான வேகப்பந்து வீச்சு, ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு ஆடிப் பழகும் வாய்ப்பும் இப்போது இல்லை. இப்போதைய உலகக் கிரிக்கெட்டின் சமத்துவமற்ற வாய்ப்பு வழங்குதலின் விளைவு தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.

முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது நல்ல முடிவு. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா அந்த கண்டிஷனில் முதலில் பேட் செய்திருந்தால் 100 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருக்கும்.

தென் ஆப்பிரிக்கா பேட்டிங் பெரிய பிரச்சினை, காரணம் மிகவும் மந்தமாக ஆடுவதுதான். ஆஸ்திரேலியா பந்து வீச்சு துல்லியத்தின் உச்சம் என்பது வேறு கதை, பிறகு 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டோம் என்ற பதற்றமும் இல்லாத ஒரு தொழில் நேர்த்தியான பவுலிங்காக இருந்தது, ஆனால் அப்படி நேர்கோட்டில் போட்டு ஸ்விங் செய்யும் துல்லியப் பந்து வீச்சை ஏதாவது தொந்தரவு செய்ய வேண்டும், இடையூறு செய்து லைன் மற்றும் லெந்த்தைக் காலி செய்ய வேண்டும்.

ஜெய்ஸ்வால் போல் புது விதமான ஆக்ரோஷத்துடனும் தீவிரத்துடனும் ஆட வேண்டும். பம்மிப் பம்மி ஆடுவதன் காரணம், ஆஸ்திரேலிய பந்து வீச்சின் மீதான மேலதிக மரியாதையும் அந்த வீரர்கள் இந்த உயரிய மட்டத்தில் இதுவரை ஆடிப் பழக்கமில்லாததும் காரணம், இது போன்ற தருணங்களில் அனுபவ வீரரான மார்க்ரம் போன்றவர்கள் நின்று ஆடி வழி காட்ட வேண்டும். ஸ்டார்க் போட்ட பந்து பெரிய இன்ஸ்விங்கர் தான் ஆனால் அதை மட்டையை நேராக வைத்து பின்னங்காலில் சென்று தடுத்திருக்க வேண்டும். மட்டையை ஒருமாதிரியான கோணத்தில் வைத்து ஆடி இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார். அதுவும் முதல் ஓவரிலேயே.

ரியான் ரிக்கிள்டன் 3 பவுண்டரிகளுடன் கொஞ்சம் எனெர்ஜி கொடுத்தார். ஆனால் அவரும் தன் முன் காலை பிட்ச் ஆஃப் த பந்துக்குக் கொண்டு செல்லாமல் ட்ரைவ் ஆடப்போனது டி20, ஒருநாள் போட்டிகளின் விளைவு எட்ஜ் ஆனார் கவாஜா கேட்சை எடுத்தார்.

வியான் முல்டர் 44 பந்துகள் ஆடி 6 ரன்கள் எடுத்தார், ஆஸ்திரேலியாவுடன் இப்படி ஆடினால் கதை அவ்வளவுதான். ராகுல் திராவிட் ஆரம்ப காலங்களில் இப்படி ஆடி நிறைய போட்டிகளில் ஸ்கோர் பண்ண முடியாமல் ஆட்டமிழந்துள்ளார். கமின்ஸ் இவரை நன்றாக ஒர்க் அவுட் செய்தார். தொடர்ச்சியாக இன்ஸ்விங்கர்களை வேறுபட்ட லெந்த்களில் வீசி இடையே பந்தை வெளியே எடுத்து குழப்பி விட்டிருந்தார், அந்த நிலையில் லெந்த் பந்து இன்ஸ்விங் ஆனது, எந்த ஒரு கால் நகர்த்தலும் இல்லை. பிட்ச் ஆஃப் த பந்துக்கு கால் செல்லவில்லை. மட்டையையும் தாமதமாகக் கொண்டு வர பவுல்டு ஆனார்.

டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதே போன்ற பந்தில் அவுட் ஆனார். இந்த முறை ஹேசில்வுட் கமின்ஸ் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தன் பக்கம் எடுத்துக் கொண்டார். தெம்பா பவுமா 37 பந்துகள் ஆடி 3 ரன்கள். இப்படி ஆடுவது ஆஸ்திரேலியர்களின் கைகளில் போய் சிக்குவதில்தான் முடியும்.

ஒரு புறம் அனுபவமின்மை, இன்னொரு புறம் உயர்மட்டத்தில் அடிக்கடி ஆடாத ஐசிசி வேலைத்திட்டத்தின் விளைவு, ஆஸ்திரேலியாவைக் கண்டு பயம் என்று தென் ஆப்பிரிக்கா சிக்கியுள்ளது. பவுலர்கள்தான் அந்த அணியைக் காப்பாற்ற வேண்டும், பவுலர்கள் காப்பாற்றினாலும் பேட்டர்கள் தேறும் வழியாக இல்லை என்பதே முதல் நாள் ஆட்டம் நமக்குக் கொடுக்கும் மனப்பதிவாகும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com