இதனிடையே, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் அமுதவடிவு உத்தரவின் பேரில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு மற்றும் விடுதிகளின் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
பயிற்சி மருத்துவர் சிந்துவின் உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் அளித்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் பொறுப்பு முதல்வர் அமுதவடிவு, “கடந்த திங்களன்று சிந்துவுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்ததில் டைபாய்டு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை அன்று சிந்துவுக்கு காய்ச்சல் தீவிரமடையவே, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நிபா வைரஸ் அல்லது வேறு ஏதாவது வைரஸ் காய்ச்சல் தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில், அவருடைய ரத்த மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே இன்று அதிகாலை சிந்துவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த ஆறு மாதங்களுக்கும் முன்பாகவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டு வந்திருக்கிறார். சிந்துவின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது, அவர் உயிரிழக்க ஒரு காரணமாக உள்ளது. சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ள சிந்துவின் ரத்த பரிசோதனையின் முடிவுகள் வெளியான பிறகே, அவர் எந்த வகையான காய்ச்சலால் உயிரிழந்தார் என்பது பற்றித் தெரிய வரும். இப்போதைக்கு சிந்துவோடு விடுதியில் ஒன்றாகத் தங்கி இருந்த மற்றும் அவரோடு பணியாற்றிய நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் யாருக்கேனும் காய்ச்சல், சளி அறிகுறி இருக்கிறதா என்று தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.