
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் நடந்த துணிகர சம்பவத்தில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
“குறிப்பிட்ட சில ஏடிஎம் இயந்திரங்கள் குறி வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளது. இதை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்த்து நடத்தியுள்ளனர்,” என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை நான்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சம்பவ பகுதிகளை ஆய்வு செய்ய 5 தனிப் படைகளும், இதில் வெளி நபர்களுக்குத் தொடர்பு இருப்பதால் மேற்கொண்டு 3 தனிப்படைகளும் என மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திருட்டு திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் வங்கி கிளை, தேனிமலை பகுதியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை, போளூர் பஸ் ஸ்டாண்டில் அருகே அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் வங்கி மற்றும் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒன் இந்தியா ஏடிஎம் வங்கி ஆகிய நான்கு ஏடிஎம் மையங்களில் இந்த கொள்ளை நடந்துள்ளது.
ரூ.70 லட்சம் கொள்ளை
4 ஏடிஎம் மையங்களின் இயந்திரத்தை உடைத்து 70 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
கண்ணன், காவல்துறை ஐஜி
கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளை முயற்சி நடத்தியதால் 4 ஏடிஎம் இயந்திரங்களும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக இன்று அதிகாலை திருடப்பட்ட வங்கி ஏடிஎம்களில் கரும்புகை வெளியேறியதால் இது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த பிறகே ஏடிஎம் கொள்ளை நடைபெற்றது தெரியவந்தது.
மேலும் திருட்டு நடைபெற்ற இடங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் ஒன் இந்தியா வங்கி கிளையானது 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதே போல போளூர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் 40 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
இந்த நிலையில் ஒரே நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது பல்வேறு குழுக்கள் மூலம் இந்த கொள்ளை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல கொள்ளையடிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படையினர் ஆந்திரா மற்றும் பெங்களூருக்கு தனிப்படை சென்றுள்ளது.
தொழில்நுட்ப தடயங்கள் ஆய்வு
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலை நான்கு இடங்களில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளை நடந்துள்ளது. குறிப்பிட்ட சில ஏடிஎம்களை குறி வைத்து இந்த திருட்டை நடத்தியுள்ளனர்.
மேலும் இந்த கொள்ளைக்கு வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி உள்ளனர். தற்போது விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எங்களுக்கு சில தரவுகள் கிடைத்துள்ளது. அதை ஆதாரமாக வைத்து இதை ஆய்வு செய்து வருகிறோம்.
இதில் எத்தனை நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாக தற்போது கூற இயலாது. ஆனால் இந்த திருட்டை ஒரு குழுவாகச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் நபர்கள் கிடையாது, வெளியூர் நபர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த வெளி நபர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்,” என்கிறார் அவர்.
பாதுகாப்பு கோளாறுகள் என்னென்ன என்பதை விசாரணை செய்து வருகிறோம். மேற்கொண்டு இதுமாதிரி குறிப்பிட்ட சில இடங்களைக் குறி வைத்து இந்த திருட்டை நடத்தியுள்ளதாகக் கண்ணன் கூறியுள்ளார்.
“குறிப்பாக இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரங்களின் உள் அமைப்புக்கள் மற்றும் அதன் செயல் இயக்கங்கள் நன்கு அறிந்த மெக்கானிக் ஈடுபட்டிருக்கக்கூடும். நான்கு ஏடிஎம் இயந்திரங்களிலும் மொத்தமாக 70 லட்சம் வரை கொள்ளை அடித்துள்ளனர்.
இதேபோன்று மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திர பிரதேசம் இதே முறையைப் பின்பற்றி திருட்டு நடந்துள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் வெற்றிகரமாகக் கண்டறிந்தோம். அதில் இரண்டு வழக்குகள் திருவண்ணாமலையில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சென்னையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் கையாண்ட விதம் வேறு, இங்கு நடைபெற்ற கொள்ளையில் கையாண்ட விதம் முற்றிலும் வேறாக உள்ளது. ஆனால் இந்த இரண்டிற்கும் ஒருசில சம்பந்தம் உள்ளது. அதை விசாரணை செய்து வருகிறோம்.
மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக சில தரவுகள் கிடைத்துள்ளன. அவற்றைக் கொண்டு வைத்து விசாரணையை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதால் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இப்போதே சொல்ல முடியாது. விசாரணை முடிவில் தெரியவரும்,” என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
