திருமணத்தன்று மணமக்கள் சண்டையிட்டு தற்கொலை முயற்சி; மணமகன் உயிரிழப்பு, மணமகளுக்குத் தீவிர சிகிச்சை!

Share

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் தீபக். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்து வரும் தீபக்கிற்கும், நிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஓர் ஆண்டுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்தூரில் உள்ள ஆர்ய சமாஜ் ஹாலில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

திருமண மண்டபத்தில் மணமக்கள் தீபக் மற்றும் நிஷா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தீபக் விஷம் குடித்துவிட்டார். அவர் விஷம் குடிப்பதை நிஷாவின் சகோதரி மகன் பார்த்து மண்டபத்தில் இருக்கும் மற்றவர்களிடம் தெரிவித்தார்.

உடனடியாக, மருத்துவமனைக்கு தீபக் கொண்டு செல்லப்பட்டார். அவர் விஷம் குடித்ததை கேள்விப்பட்டதும் நிஷாவும் விஷம் குடித்துவிட்டார். அவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருவரும் வேறு வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், தீபக் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். நிஷா தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமண நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் நிஷா, தீபக் மீது போலீஸில் புகார் செய்திருந்தார். போலீஸார் இரண்டு பேருக்கும் கவுன்சலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர். தற்போது நடந்துள்ள தற்கொலை முயற்சி குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து போலீஸ் அதிகாரி திரிபாதி கூறுகையில், `தீபக்கும், நிஷாவும் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிறுவனத்தில் வேலை செய்த போது அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து கடந்த ஆண்டு தீபக் தனது வீட்டில் நிஷாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாகத் தெரிவித்தார். இருவரது குடும்பமும் அதற்குச் சம்மதித்து நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் தீபக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நகரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஆனால் நிஷா தொடர்ந்து திருமணம் செய்ய நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

மணமக்கள்

தீபக், இரண்டு ஆண்டுகளுக்கு திருமணத்தை தள்ளிப்போடும்படி கேட்டுக்கொண்டார். இதனால் அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற நிஷா, இரண்டு நாள்கள் தீபக்குடன் தங்கி இருந்தார். அப்போதும் அவர்களுக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் தீபக் மீது போலீஸில் புகார் செய்தார். அதனை தொடர்ந்தே இருவருக்கும் உடனே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் திருமண மண்டபத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் விஷத்தை குடித்துவிட்டனர்’ என்று தெரிவித்தார்.

திருமண மண்டபத்திலேயே மணமக்களுக்குள் சண்டை ஏற்பட்டு, இருவரும் தற்கொலை முயற்சி செய்து, மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com