கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், சன்னி சாந்து 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்களும் விளாசினர். திருச்சி அணி தரப்பில் அதிசராஜ் டேவிட்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சாக ஜெகதீசன் கவுசிக் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், ராஜ் குமார் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாசினர்.
பொய்யாமொழி வீசிய கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. செல்வகுமரன், ஜெகதீசன் கவுசிக் களத்தில் இருந்த நிலையில் அந்த அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சேலம் அணி சார்பில் முகமது 4, சன்னி சாந்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.